கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா? - முதல்வர் நாளை ஆலோசனை

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா என்பது குறித்து மருத்துவத்துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் தினசரி கொரோனா பாதிப்பு 10,000-ஐ கடந்திருந்தது. அந்தவகையில் இன்றும் பாதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த இன்றைய தினம் முழுமுடக்கம் அமலில் உள்ளது. இதுபோன்ற சூழலில் தலைமைச் செயலகத்தில் நாளை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு தொடர்பாக ஆலோசிக்க உள்ளார். அந்த ஆலோசனையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா என்றும், அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் தமிழகத்தில் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதிக பாதிப்புகளை சந்தித்துவரும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.