கொரோனா வைரஸ்

பூஸ்டர் தடுப்பூசியின் விலை குறைப்பு - இன்று முதல் தனியார் மையங்களிலும் செலுத்திக்கொள்ளலாம்

Veeramani

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் எனப்படும் கூடுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா 3ஆவது அலை வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. 2ஆவது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் பூர்த்தியானவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். அந்த வகையில், அரசு சார்பில் ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் தனியார் மையங்களிலும் 18 வயது நிரம்பியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.



தனியார் மருத்துவமனைகளும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை குறைத்துள்ளன. கோவிஷீல்டின் ஒரு டோஸ் விலை 600 ரூபாயாக இருந்த நிலையில், அதனை 225 ரூபாயாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் குறைத்துள்ளது. இதேபோல கோவாக்சின் விலை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது. இதனுடன் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக 150 ரூபாய் வசூலித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.