கொரோனா வைரஸ்

அச்சுறுத்தும் ஒமைக்ரான் கொரோனா: சர்வதேச விமானக் கட்டுப்பாடுகள் தொடர்கிறது?

கலிலுல்லா

ஒமைக்ரான் என்ற புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அச்சம் எழுந்துள்ள நிலையில் சர்வதேச விமான போக்குவரத்தை முழுமையாக தொடங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்

நாட்டில் தற்போதைய கொரோனா நிலவரம், தடுப்பூசி பணிகள் உள்ளிட்டவை குறித்து அரசுத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது சர்வதேச அளவில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்தும் புதிதாக எழுந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் அச்சம் குறித்தும் பிரதமருக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கங்கள் குறித்தும் பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கி கூறினர்.

இதன் பின் பேசிய பிரதமர், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்களை வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப சோதனைக்குட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஒமைக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்தினை தொடங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். வரும் டிசம்பர் முதல் வழக்கமான சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அரசு அறிவித்திருந்தது. தற்போது பிரதமரின் அறிவுறுத்தல்படி அம்முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் எனத் தெரிகிறது