கொரோனா வைரஸ்

’’அபராதம் கட்ட காசு இல்ல சார்’’ - மாஸ்க் சோதனையில் அதிகாரிகளிடம் கதறிய பயணிகள்!

Sinekadhara

நாங்குநேரியில் முகக்கவசம் அணியாமல் அரசு பஸ்சில் பயணித்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் முகக்கவசம் அணியாமல் அரசு பஸ்சில் பயணித்தவர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கொரானா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி பலர் முகக்கவசம் இன்றி வெளியில் சுற்றி வருகின்றனர். இதனையடுத்து சுகாதாரத்துறை சார்பில் இன்று நாங்குநேரி அண்ணாசாலையில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். மேலும் முகக்கவசம் அணியாமல் சுற்றிவந்த பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இலவசமாக முகக்கவசமும் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து நாங்குநேரி பஸ் ஸ்டாண்டில் வந்த அரசு பஸ்களை சோதனையிட்ட சுகாதாரத்துறையினர் முகக்கவசம் அணியாமல் இருந்த பயணிகளுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். அப்போது சில பயணிகள் அபராதம் செலுத்த பணம் இல்லை என பரிதாபத்துடன் தெரிவித்தனர். ஒருசிலர் பஸ்ஸில் தூங்கியதால் முகக்கவசம் காற்றில் பறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 10க்கும் மேற்பட்ட பயணிகளிடம் தலா 200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர்களிடம் பயணிகள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்துமாறு அறிவுரையும் வழங்கியுள்ளனர்.