கொரோனா வைரஸ்

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள்: ககன்தீப் சிங் பேடி பேட்டி

Veeramani

கொரோனா அறிகுறியுடன் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை, நோய் பாதிப்பு அதிகரிக்கக் கூடாது என்பதற்காக மருந்துகள் கொடுக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை. பரிசோதனை முடிவு வரும் வரை நோய் பாதிப்பு அதிகரிக்கக் கூடாது என்பதற்காக மருந்துகள் கொடுக்கப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்க மருந்துகள் கொடுக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்குள் நோய் தொற்று அதிகரிக்கும் என்பதால் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் 60 வயது கீழ் உள்ளவர்களின் வீடுகளுக்கே மருத்துவப் பணியாளர்கள் சென்று பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே ஊரடங்கில் வெற்றி கிடைக்கும். சென்னையில் மூக்கை மறைக்கும்படி முகக்கவசம் அணியாமல் மக்கள் செல்வது கவலைக்குரியது. சென்னையில் கொரோனா சோதனை கொடுத்தவர்கள் அனைவருக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படும். கொரோனா தொற்று சோதனை தந்தவர்கள் அனைவருக்கும் கோவிட் பாதித்தவர்களாக கருதி சிகிச்சைகளை அளிக்கவுள்ளோம்.

சென்னையில் கொரோனா தொற்று சோதனை கொடுத்து வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள இடவசதிகள் இல்லை என்றால் கோவிட் கேர் சென்டரில் வந்து தங்கலாம். கோவிட் கேர் சென்டரில் உணவு படுக்கைகள் மருத்துவ வசதிகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளது

இதுவரை சென்னையில் கோவிட் கேர் சென்டரில் 25% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 60 வயதிற்கு மேல் உள்ளவர்களை நேரடியாக செவிலியர்களை கொண்டு வீடுகளுக்கு சென்று சிகிச்சைகள் அளிக்க உள்ளோம். சென்னையில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மண்டல வாரியாக களப்பணியில் ஈடுபட உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் வெற்றி பெற முடியும்."என்றார்.