கொரோனா வைரஸ்

என்95 மாஸ்க்குகள் கொரோனா பரவலை சிறப்பாக தடுக்கும் - இந்திய விஞ்ஞானிகள்

Sinekadhara

இருமல் மற்றும் தும்மலின்போது வாய்வழியாக வெளிவரும் நீர்த்துளிகள் கொரோனா தொற்று அதிகமாக பரவ வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் எந்த முகமூடி சிறந்தது என்ற ஆராய்ச்சியில், என்95 மாஸ்க்குகள் முக்கியபங்கு வகிப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய (ஐஎஸ்ஆர்ஓ) ஆராய்ச்சியாளர்கள் உட்பட பலரும் கூறியுள்ளனர்.

இஸ்ரோவைச் சேர்ந்த பத்மநாப பிரசன்னா சிம்ஹாவும், கர்நாடகா ஸ்ரீ ஜெயதேவா இதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பிரசன்னா சிம்ஹா மோகன் ராவும், இருமல் மற்றும் தும்மலினால் வெளிவரும் நீர்த்துளிகளை எந்த முகமூடி சிறப்பாகத் தடுக்கிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இயற்பியல் இதழில் வெளியான ஆய்வில், என்95 மாஸ்க்குகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கண்டறிந்துள்ளது. என்95 மாஸ்க்குகள் இருமலின் ஆரம்ப வேகத்தை 10 காரணிகள் வரை குறைப்பதோடு, 0.1 முதல் 0.25 மீட்டர் அவற்றைத் தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாஸ்க் அணியாமல் இருமும்போது அது 3 மீட்டர்வரை செல்லும். சாதாரண மாஸ்க்குகள் 0.5 மீட்டர்வரை தடுக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு தனிநபர் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைத் குறைப்பதன்மூலம், பாதிக்கப்பட்ட இடங்களில் செல்லும் ஆரோக்கியமானவர்களுக்கு சிறிது பாதுகாப்பை கொடுக்கமுடியும் என சிம்ஹா கூறுகிறார். ராவ் மற்றும் சிம்ஹா இருவருமே அடர்த்தியும், வெப்பநிலையும் ஒன்றுடன் ஒன்று சிக்கலான தொடர்புடையவையாக இருப்பதாகவும், மேலும் இருமல் அவற்றின் சுற்றியுள்ள பகுதியைவிட அதிக வெப்பத்தை வெளிவிடும் என்றும் கூறியுள்ளனர்.

ஐந்து சோதனை மாதிரிகளின் இருமல் அடர்த்தியின் படத்தை ஸ்க்லீரன் இமேஜிங் நுட்பம் மூலம் காட்சிப்படுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த படங்களை வைத்து நீர்த்துளிகளின் வேகம் மற்றும் பரவலை மதிப்பிட்டுள்ளனர். பரவலைத் தடுப்பதில் என்95 மாஸ்க்குகள் சிறப்பாக செயல்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இவை 0.1 முதல் 0.25 மீட்டர் வரை கட்டுப்படுத்துகின்றன. அறுவைசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மாஸ்க்குகள் 0.5 முதல் 1.5 மீட்டர்வரை இந்த பரவலை தடுக்கும் எனக் கூறியுள்ளனர்.

ஒரு மாஸ்க் அனைத்துத் துகள்களையும் வடிகட்டாவிட்டாலும், துகள்களின் நீர்த்திவலைகள் வெகுதூரம் பயணிப்பதைத் தடுக்கமுடிந்தால் அவை சிறந்தவையாக கருதப்படும். அதிநவீன மாஸ்க்குகள் கிடைக்காத சூழ்நிலையில் ஏதேனும் ஒரு மாஸ்க்கை கட்டாயம் பயன்படுத்துவது தொற்றுநோய் பரவலைக் குறைக்கும் என சிம்ஹா கூறுகிறார். இருமலைத் தடுக்க முழங்கையை பயன்படுத்துவது நல்ல மாற்று என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கும் ஆராய்ச்சியாளர்கள் முரண்படுகிறார்கள். மாஸ்க் போன்ற ஏதேனும் ஒன்றால் மூக்கை மூடுவதைவிட வெறும்கை பாதுகாப்பானதாக இருக்காது. சிறிது இடைவெளி இருந்தாலே பரவிவிடும் என அவர்கள் கூறுகின்றனர்.

இவை அனைத்திற்கும் மேலாக சமூக இடைவெளியுடன் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவது அவசியம் என வலியுறுத்துகின்றனர்.