கொரோனா வைரஸ்

ஒமைக்ரான்: மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை அமல்

Sinekadhara

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் பரவிவரும் ஒமைக்ரான் வகை வைரஸின் பாதிப்பு இந்தியாவிலும் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் 25 பேருக்கு கண்டறியப்பட்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் ஏற்கெனவே 10 பேரிடம் இந்த வகை வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 3 பேரிடமும், பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரில் 4 பேரிடமும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் பரவலை தடுக்க மும்பையில் இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பேரணி, ஊர்வலம் மற்றும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.