தமிழ்நாட்டில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிரார்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி செலுத்தும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு அரசு மேல்நிலை பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முதல்வருடன் அமைச்சர் மா.சுப்ரமணியம், பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வை தொடங்கி வைத்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார். நிகழ்ச்சி மேடையில் மட்டுமன்றி, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். தனது அப்பதிவுகளில், “பெற்றோர்களே! எவ்விதத் தயக்கமுமின்றி 15-18 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளைகளை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள்!
நீங்களும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்! மக்கள் இயக்கமான இதில் உங்களின் பங்களிப்புதான் கொரோனாவில் இருந்து தமிழகத்தைக் காக்கும்!” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது பெற்றோர்கள் உடனிருக்க வேண்டும் என அறிவிப்பு