கொரோனா வைரஸ்

காணாமல் போன கொரோனா நோயாளி - மருத்துவமனைக்கு வெளியே சடலமாக மீட்பு

காணாமல் போன கொரோனா நோயாளி - மருத்துவமனைக்கு வெளியே சடலமாக மீட்பு

Sinekadhara

வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தர்லால் மருத்துவமனையில் காணாமல் போன கொரோனா நோயாளி மருத்துவமனைக்கு வெளியே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்துபோன அந்த நபர் ஒரு வாரத்திற்கு முன்பு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் பி.ஹெ.யு-இன் அதிர்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவரை கொரோனா வார்டுக்கு மாற்றியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து அவர் காணாமல் போய்விட்டதாக போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். திங்கட்கிழமை அவரது உடலை மருத்துவமனைக்கு வெளியே ஒரு குழாய் அருகே பிணமாக மீட்டுள்ளனர்.

இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி கோஷமிட்டனர். காவல்துறையின் உதவியுடன் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இறந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததாக நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை விரிவாக ஆராய்ந்த போலீஸார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம், நோயாளி மருத்துவமனையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றிருக்கிறார். அவர் இரண்டாவது மாடியிலிருந்து கீழே இறங்க முயற்சித்திருக்கிறார். அதற்கு கட்டிடத்தின் வெளிப்புறத்தில் செல்லும் ஒரு குழாயைப் பிடித்து இறங்கியிருக்கிறார். குழாய் வெடித்ததால் அவர் தரையில் விழுந்து, இறந்திருப்பதாக தெரிகிறது. உடனே அவரது உடலை சவக்கிடங்கிற்கு மாற்றியுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

இதுபற்றி கூறிய மருத்துவமனை கண்காணிப்பாளர், அவருக்கு தலையில் அடிப்பட்டிருந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் கொரோனா சிகிச்சையின்போது நன்கு ஒத்துழைத்தார் என்று கூறியிருக்கிறார்.

அதே மருத்துவமனையில் 21 வயது கொரோனா நோயாளி நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் கொரோனா வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் அவரைத் தடுத்துக் காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள் அந்த நபரும் அதே முயற்சியில் இறங்கியதாக தெரிகிறது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.