கொரோனா வைரஸ்

”கடந்த 3 மாதமாக தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

webteam

நவம்பர் மாத இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 7 வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற்று வருகின்றது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் பொழுது, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 7வது தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதில் ஆர்வமுடன் மக்கள் தடுப்பூசி செலுத்த வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 73லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 87% முதல் தவணை தடுப்பூசியும், 48% 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று சென்னை வந்த 14 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை சேர்த்து தற்போது 59 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இந்த பேரிடர் காலத்தில் தமிழக மக்கள் அரசின் இப்படியான தடுப்பூசி முகாம்களை வீணடிக்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படவில்லை. வரும் நவம்பர் மாதத்திற்கு 1 கோடி 40 லட்சம் தடுப்பூசி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நவம்பர் மாத இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம் பெறும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நவம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் பள்ளிகளை பொறுத்தவரை உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றி தீபாவளி பண்டிகையையும் மக்கள் கொண்டாட வேண்டும்.

அம்மா உணவகம் மற்றும் அம்மா மினி கிளினிக் மையங்களில் கூடுதலாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், பணியாளர்களின் விவரம் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. உடன் பணியாளர்கள் அதிகமாக உள்ள மையங்களில் ஆட்கள் குறைக்கப்பட்டு, மாற்று இடத்தில் பணி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே முதலமைச்சர் தலைமையில் சேவை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வழக்கமாக மழைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பது வழக்கம். ஆனால் அதனை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை உள்ளிட்ட சேவை துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், 21,936 பணியாளர்களும், சென்னையில் 3,568 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 168 கொசு ஒழிப்பு வாகனங்களும், 215 கை தெளிப்பாண்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

நள்ளிரவு எழும்பூர் தாய் சேய்நல மருத்துவமனையில் சீலிங் பேன் விழுந்தது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றுள்ளனர். உரிய காரணம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூறினார்.

- சுகன்யா