கொரோனா வைரஸ்

கூடுதல் தளர்வுகள் இல்லை: தமிழகத்தில் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

Sinekadhara

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி ஊரடங்கு மேலும் ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டதன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. மேலும் தற்போது கொரோனா கிட்டத்தட்ட கட்டுக்குள் வந்துள்ளது. எண்ணிக்கை குறையத் தொடங்கியதிலிருந்து அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகள் இன்றி ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில்தான் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் இந்தமுறை கூடுதல் தளர்வுகள் எதுவும் இல்லை எனவும் அறிவித்திருக்கிறது.

மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி இருக்கிறது. குறிப்பிட்ட பகுதிகளில் அதிக கூட்டம் சேர்வது கண்டறியப்பட்டால் மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்கள் நலன்கருதி அந்தப் பகுதியை மூடும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக உடல் வெப்பநிலை பரிசோதனையை வாடிக்கையாளர்களுக்கு மேற்கொள்ள வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது அலையை தவிர்க்க கூடுதல் விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் எனவும், கொரோனா கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி ஆகிய பணிகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் அறிவுறுத்தி இருக்கிறார்.