கொரோனா வைரஸ்

”65 வயதை கடந்த கைதிகள் சிறைக்கு வராதீர்கள்”.. கேரள அரசின் புதிய உத்தரவு

Sinekadhara

கேரளாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பரோலில் வெளிவந்த 65 வயது மேற்பட்டவர்களுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்துள்ளது அம்மாநில அரசு. அதேபோல், மற்ற வழக்குகளில் கைதாகி பரோலில் சென்றுள்ளவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வந்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கேரளாவில் 3 மத்திய சிறைகள் உட்பட 54 சிறைகளில் 6000க்கும் அதிகமான குற்றவாளிகள் இருந்தனர். திருவனந்தபுரம் மத்திய சிறையில் ஆகஸ்ட் மாதத்தில் பணியாளர்கள் உட்பட 480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே கேரள மனித உரிமை ஆணையம், குற்றவாளிகளுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்துதல் வசதிகளை உருவாக்கித் தரவேண்டும் என உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தது.

தொற்றுநோய்களின் போது சிறைகளில் கூட்டம் குறைப்பதற்காக, கேரள உயர்நீதிமன்றம் மார்ச் மாத இறுதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைதண்டனை அனுபவித்த கைதிகளுக்கு பரோல் வழங்கியது.

அதன்படி, ஜெயிலில் கொரோனா பரவலைத் தடுக்க எண்ணிய கேரள அரசு, சமீபத்திய மாதங்களில் பல்வேறு பிரிவுகளின்கீழ் கைதான குற்றவாளிகளை பரோலில் அனுப்பியிருந்தது. எனினும், குழந்தைகள் மற்றும் கடத்தல் விஷயங்களில் ஈடுபட்டவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் தீவிரவாதங்கள் போன்ற முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பரோல் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.