கொரோனா வைரஸ்

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: இறப்பவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 71,365 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 67,597 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 1.72 லட்சத்தையொட்டி பதிவாகியுள்ளது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,72,211 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 4,10,12,869 என்றாகியுள்ளது. மேலும் தற்போது சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 8,92,828 என குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 15,71,726 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் அதில் 1.72 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் தினசரி கொரோனா உறுதியாவோரின் எண்ணிக்கை விகிதம், 4.54% என்றாகியுள்ளது. நேற்றைய தினம் இது 5.02% என்றிருந்தது. சிகிச்சையிலிருப்போர் விகிதம், 2.11% என்றுள்ளது.

கொரோனா உயிரிழப்பை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 1,217 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 1,188 பேர் உயிரிழந்த நிலையில் இன்று அது சற்று அதிகரித்திருக்கிறது. இறப்பு விகிதம், 1.19% என்றுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,05,279 என்று உயர்ந்துள்ளது. கொரோனா உறுதிசெய்யப்படுவோர் விகிதம் லட்சங்களிலிருந்து ஆயிரமாக குறைந்திருக்கும் நேரத்திலும்கூட, உயிரிழப்புகள் இன்னமும் ஆயிரங்களையொட்டியே இருப்பது சற்று அதிர்ச்சியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 53,61,099 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை இந்தியாவில் 170.87 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.