கொரோனா வைரஸ்

இந்தியா: தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில், 30,757 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் 30,615 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் அது இன்று சற்று குறைந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா உறுதிசெய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,27,54,315 என்று உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 67,538 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,19,10,984 அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98.03% என்றுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,32,918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையிலிருப்போர் விகிதம், 0.78% என்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 541 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக நேற்றைய தினம் 514 பேர் என்றிருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, இன்று சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,10,413 என அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம், 1.19% என்றுள்ளது. அதேநேரத்தில் நாடு முழுவதும் இதுவரை 174.24 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,79,705 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதில் 30,757 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா உறுதிசெய்யப்படுவோர் விகிதம் 2.61 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நேற்று இந்த விகிதம் 2.45 என்றிருந்தது குறிப்பிடத்தக்கது.