கொரோனா வைரஸ்

மீண்டும் அச்சுறுத்தல்... கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

நிவேதா ஜெகராஜா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16,135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1.13 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 16,135 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலவே கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,958 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 4,28,79,477 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மட்டுமன்றி 24 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 5,25,223 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 1,13,864 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.53 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தினசரி சதவீதம் 4.85 ஆகவும், வாராந்திர சதவீதம் 3.74 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் நாட்டில் 1,78,383 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,97,98,21,197 டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள மத்திய அரசு, விமான நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

செய்தியாளர்: விக்னேஷ் முத்து