கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஈஷா வளாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்:கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து பொதுமக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். மேலும், தேவைப்பட்டால், அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றவும் ஈஷா தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகும் தினக் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோரைப் பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் வேலையின்மையின் காரணமாக, பசி, பட்டினியால் வாடும் 2 பேருக்காவது உணவு அளித்து உதவ வேண்டும். நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், உணவின்றி பட்டினியால் ஒருவர் இறந்தார் என்ற நிலைவராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலில் ஒவ்வொரு குடிமக்களும் தனிநபராக நம்மால் இயன்றதைச் செய்வது மட்டுமின்றி, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது நமது கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து, பொதுமக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கூடுதல் இடம் தேவைப்படும் சூழல் உருவானால், ஈஷா வளாகத்தைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உலகம் முழுவதும் நடைபெறுவதாக இருந்த ஈஷா யோகா மையத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் கடந்த வாரம் முதல் தேதி குறிப்பிடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.