நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர் போன்றவர்களே முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மற்றவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் இதுவரை வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போதோ வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. காரணம் என்ன ? இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.
முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் முக கவசம் வாங்குவதுதான் என்றில்லை. வீட்டிலேயே தயாரித்த முகக்கவசம் என்றாலும் சரிதான், வீட்டை விட்டு வெளியே செல்லும் அனைவரும் முகக்கவசத்தை அணியவேண்டும் என்கிறார்கள் சுகாதாரத் துறையினர். காரணம், கொரோனா வைரஸ் பரவும் விதம்தான். இருமல், தும்மல் போன்றவற்றால் வெளிப்படும் நீர்திவலைகளில் உள்ள வைரஸ் ஆறு அடி தூரம் வரை வெளிப்பட்டு மற்றவர்களை தொற்றும் என்று இதுவரை கருதப்பட்டது. ஆனால் மூச்சு விடுதலில் வெளிப்படும் நுண்வைரஸ் துகள்கள் மூலமாகவும் வைரஸ் பரவும் என்று தற்போது தெரியவந்துள்ளது.
ஐந்து மைக்ரோ மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள இந்த வைரஸ் காற்றில் பல மணிநேரம் மிதக்கக்கூடியது என்றும் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை பெரிதும் தவிர்க்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு சார்ஸ் பரவியபோது எடுத்த ஆய்வின்படி கைகழுவுவதன் மூலம் 55 சதவிகிதம் அளவுக்கு தொற்றை தவிர்க்கலாம் என்று தெரிய வந்துள்ளது. கையுறைகளை அணிவதன் மூலம் 57 சதவிகிதமும், முகக்கவசம் அணிவதன் மூலம் 68 சதவிகிதமும் தொற்றை தவிர்க்கலாம் என்று தெரியவந்தது.
துணிவகைகளைப் பொறுத்தவரை, மேற்துண்டு வகை துணிகள் 40 சதவிகிதம் அளவுக்கு தொற்றை தவிர்க்க உதவும் வியர்வை உறிஞ்சும் துணிவகைகள் மூலம் 20 முதல் 40 சதவிகிதமும், ஸ்கார்ப் வகை துணிகள் மூலம் 10 முதல் 20 சதவிகிதமும், டி ஷர்ட் வகை துணிகள் மூலம் 10 சதவிகிதம் அளவுக்கும் தொற்றை தடுக்க முடியும். அனைவருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவைப்படும் முகக்கவசம் அவசியமல்ல என்பதால், நமக்கு நாமே முகக்கவசத்தை தயாரித்து தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.