கொரோனா வைரஸ்

ஒமைக்ரான் இருப்பதை கண்டறிய இரட்டை ஆர்டி-பிசிஆர் சோதனை

Veeramani

மரபணு சோதனைக்கு முன்பாக இரு முறை ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தும்படி மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய நாடு முழுவதும் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல், ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை மரபணு சோதனை மூலமாகவே உறுதி செய்ய முடியும். இந்த பரிசோதனைக்கான செலவு 5 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.

இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படும்போது, அதில் தொற்று இருப்பது உறுதியானால், ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதை கண்டறிய மரபணு வரிசைமுறை கொண்ட இறக்குமதி ஆர்டிபிசிஆர் கருவியில் இரண்டாவது முறையாக பரிசோதனை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதிலும் தொற்று இருப்பது உறுதியானால் நேரடியாக மரபணு சோதனை நடத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை ஆர்டிபிசிஆர் சோதனைக்கான செலவு வெறும் 260 ரூபாயில் முடிந்து விடும் என்பதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.