தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கொரோனாத் தொற்று பரவல் குறித்தான அச்சம் என்பது அதிகமாக நிலவுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது “ தளர்வுகள் இருந்தாலும் நோய் பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டமான இடத்தில் தனிமனித இடைவெளி அவசியம். முதியவர்கள் இருந்தால் தள்ளி இருக்க வேண்டும். பணி செய்யும் இடத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
40 விழுக்காடு மக்கள் முகக்கவசம் பயன்படுத்துவதில்லை எனத் தெரிகிறது. கொரோனா குறித்தான அச்சத்தை மக்கள் உணர வேண்டும். பேருந்து படியில் பயணிக்க வேண்டாம். பேருந்து நிலையம், கோயில் போன்ற இடத்தில் கட்டாயம் தனிமனித இடைவெளி மிக மிக அவசியம். பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். இறப்பு குறைப்பும், நோய் பரவலை கட்டுப்படுத்துவதும்தான் இலக்கு. தொற்று குறித்த அறிகுறி இருந்தால் தாமதிக்க வேண்டாம். இதில் ஒத்துழைப்பு அவசியம்.
சென்னையில் களப் பணியாளர்கள் வீடு வீடாக சோதனை செய்து வருகின்றனர். மருத்துவ முகாம்கள் மூலம் நோயின் பாதிப்பானது கட்டுப்படுத்தப்பட்டு பாதிப்பு ஒரு நாளைக்கு ஆயிரமாக குறைந்தது. மதுரையில் குறைத்து இருக்கிறோம். சேலம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகளை செய்து வருகிறோம்.
கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்து வருகிறோம். அரசு மருத்துவமனைகள், ஒரு தனியார் மருத்துவமனையில் 300 பேருக்கு பரிசோதனை செய்ய இருக்கிறோம். சித்தா, ஆயுர்வேத மருந்துகளையும் ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் உடன் பரிசோதனை செய்யும் நடவடிக்கை நடந்து வருகிறது.” என்றார்