கொரோனா வைரஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம் - திருச்சி அரசு மருத்துவமனை

kaleelrahman

கடந்த ஐந்து மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 நிறைமாத கர்ப்பிணிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் 22 சுகப்பிரசவமும் 78 சிஸேரியன் பிரசவங்களும் அடங்கும்.


பிறந்த 100 குழந்தைகளில் இருவருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. மீதமுள்ள 98 குழந்தைகளுக்கும் கொரோனா நோய்த்தொற்று இல்லை.

அதுமட்டுமல்லாமல், பிற மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்த பிறகு குழந்தைகளுடன் கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட 44 தாய்மார்களும் தற்போது நலமுடன் உள்ளனர். இந்த 44 பேரில் ஒரு குழந்தைக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அக்குழந்தையும் நலமுடன் உள்ளது.


மொத்தமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 144 தாய்மார்கள் மற்றும் அவர்களது பச்சிளங்குழந்தைகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.