கொரோனா வைரஸ்

டெல்லி அரசின் ‘பொதுமுடக்க தளர்வு’ பரிந்துரையை நிராகரித்த டெல்லி துணைநிலை ஆளுநர்

நிவேதா ஜெகராஜா

தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த டெல்லி அரசு முடிவு செய்திருந்தது. இதுகுறித்து துணை நிலை ஆளுநருக்கு அம்மாநில முதல்வர் நேரடியாக பரிந்துரை விதித்திருந்த நிலையில், அது தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு டெல்லி துணை நிலை ஆளுநருக்கு வழங்கிய பரிந்துரைகளின் படி, தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரையிலான வாரயிறுதி ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதேபோல கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றை வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறக்கவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் தற்பொழுது டெல்லியில் உள்ள தனியார் நிறுவனங்கள் 100% ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய வைக்க கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் 50 சதவீத ஊழியர்களை அலுவலகங்களுக்கு அனுமதிக்க டெல்லி அரசு முடிவு செய்யப்பட்டது. தலைநகர் டெல்லியில் இன்றைய தினம் தினசரி பாதிப்பு 12,306 ஆக இருக்கக்கூடிய நிலையில் தொடர்ந்து தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால்தான் டெல்லி அரசு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவுகளை எடுத்திருந்தது.

எனினும் நேற்றைய ஒரு நாள் உயிரிழப்பு என்பது 43 ஆக டெல்லியில் பதிவாகியிருந்தது. இது கடந்த கடைசி 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாகும். எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவுகளில் அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுனர். அதை கருத்தில் கொண்டு, தற்போது துணை நிலை ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவிக்கையில், “நாம் மூன்றாவது அலையை கடந்திருக்கலாம்தான். ஆனால் எண்ணிக்கை இன்னும் வேகமாக குறைந்தால்தான் தளர்வுகளில் சமரசம் செய்யப்படும்” எனக்கூறியுள்ளார்.