கொரோனா வைரஸ்

தினசரி கொரோனா தொற்று 2,927 ஆக அதிகரிப்பு

Sinekadhara

நாடெங்கும் தினசரி கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தினசரி தொற்று எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. இந்நிலைடில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது ஆலோசனை நடைபெற்றது. முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 927 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 26 பேர் இறந்துள்ளதாகவும் மகாராஷ்டிராவில் 4 பேரும் டெல்லி, மிசோரமிலிருந்து தலா ஒருவரும் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 188 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.