கொரோனா வைரஸ்

சலூன் கடை உரிமையாளருக்கு கொரோனா: கடைக்கு வந்தவர்களை கண்காணிக்கும் அதிகாரிகள்..!

Rasus

சலூன் கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கடை அடைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸினால் உலகமே பாதிக்கப்பட்டு ஏராளமான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகமாக பரவிவருகிறது. அதன்படி நெல்லையில் வெளி மாநிலம் மற்றும் மாவட்ட பகுதியில் இருந்து வந்தவர்கள் என கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது.

இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் சலூன் கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சலூன் கடை மற்றும் அவர் குடியிருப்பு பகுதிகளை அடையாளம் கண்டு கிருமிநாசினி தெளித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவரது சலூன் கடையில் தனிமனித விலகல் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடையை அடைக்க 2 நாட்களுக்கு முன்னதாகவே உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் சலூன் கடை உரிமையாருக்கு தொற்று எப்படி வந்தது, அந்த கடைக்கு வந்து சென்றவர்கள் யார் என மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.