கொரோனா வைரஸ்

கொரோனா கால மகத்துவர்: பசித்தவருக்கு முட்டையுடன் சத்தான உணவு வழங்கும் வட்டாட்சியர் குமார்

கொரோனா கால மகத்துவர்: பசித்தவருக்கு முட்டையுடன் சத்தான உணவு வழங்கும் வட்டாட்சியர் குமார்

kaleelrahman

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் தமது சொந்த செலவில் நாள்தோறும் 100 பேருக்கு சத்தான மதிய உணவுடன் முட்டை, பழம், தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகிறார்.

கொரோனா முழு ஊரடங்கால் பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து வாடும் ஏழை எளிய மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் குமார், தமது சொந்த செலவில் நாள்தோறும் சத்தான மதிய உணவு வழங்கி வருகிறார்.

நாள்தோறும் மதிய உணவில் சாம்பார், கார குழம்பு, ரசம், மோர், முட்டை மற்றும் ஒருநாள் பாகற்காய் கூட்டு, மறுநாள் கோவைக்காய் கூட்டு என சத்தான உணவும், வாழைப்பழம், ஆப்பிள், தண்ணீர் பாட்டில் என நாள்தோறும் 100 சாப்பாடுகளை ஊத்துக்கோட்டை - சத்தியவேடு சந்திப்பில் பசித்தவருக்கு உணவு என்ற அடிப்படையில் வழங்கி வருகிறார்.

100 சாப்பாடுகளை ஒரு இடத்தில் வைத்துவிடுவேன், தேவைப்படுவோர் அதை எடுத்துச் செல்லலாம் என வட்டாட்சியர் குமார் தெரிவித்தார்.. ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் குமாரின் பசித்தவருக்கு உணவு என்ற முறையை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே. கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். ஊரடங்கு முடியும் வரை பசித்தவருக்கு உணவு என்ற இந்த முறை தொடரும் என வட்டாட்சியர் குமார் தெரிவித்தார்.