கோவை அரசு மருத்துவமனை,
கோவை அரசு மருத்துவமனை, ஒளிப்பதிவாளர் தீபன், ஐஸ்வர்யா
கொரோனா வைரஸ்

கோவை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 55 வயது பெண் உயிரிழப்பு!

PT WEB

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோவை உப்பிலிப்பாளையத்தை சேர்ந்த அந்த பெண்ணிற்கு ஏற்கனவே நுரையீரல் புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட இணை நோய்களும் உள்ளதாக கூறும் மருத்துவர்கள், கடந்த மாதம் 17 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சுவாச இழப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை,

கடந்த மாத இறுதியிலிருந்து நாடு முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், உடன் வருபவர்கள், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர் என அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனை நுழைவு வாயிலில் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு, முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனை,

இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் ஆங்காங்கே முகக் கவசம் அணிய வேண்டும் என நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டுள்ளன. கோவையில் நேற்றைய நிலவரப்படி 16 பேர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட நிலையில், 18 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 88 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல மாதங்களுக்கு பிறகு கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பு இதுவே ஆகும்.

தமிழக அளவில் சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு கோவை மாவட்டத்தில் அதிகம் என்றாலும், குணமடைந்து வீடு திரும்பும் எண்ணிக்கை, தொற்று ஏற்படும் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக உள்ளது ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது.