கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: நாளை ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

நிவேதா ஜெகராஜா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தினசரி தொற்று எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் நாளை கூட்டம் நடைபெறவுள்ளது. முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது.

கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், முதலமைச்சர் நாளை ஆலோசிக்கவுள்ளார்.