கொரோனா வைரஸ்

ஊரடங்கு எச்சரிக்கைகள்: மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன ?

jagadeesh

ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் வெளியே வராமல் தடுக்க பிற மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளை பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதை மீறி பல இடங்களில் மக்கள் வீதிகளில் நடமாடுகின்றனர். அதை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் தேவையின்றி வெளியே நடமாடினால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஒருபடி மேலே போய் ஊரடங்கை மீறுவோரை சுட்டுத்தள்ளுவதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை மட்டும் 5 ஆயிரத்து 103பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் பல்வேறு மாநிலங்களிலும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. கட்டுப்பாடுகள் ஒருபுறமிருக்க கனிவான நடவடிக்கைகள் மூலம் மக்கள் வெளியில் வருவதை தடுக்கவும் சில மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஊரடங்கு உத்தரவின் நோக்கம் நிறைவேற வீடுகளுக்கே சென்று மக்களுக்கு உணவு வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.