corona treatment pt desk
கொரோனா வைரஸ்

திருச்சி: அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிகள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி!

திருச்சி அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிகள் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

webteam

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Covid ward

இந்நிலையில், திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரானா தொற்று சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில், “தனியாக தொடங்கப்பட்டுள்ள இந்த கொரானா சிகிச்சை மையத்தில் தற்போது, 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 330 ஆக்ஸிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார், 500-க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.

தற்போது, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தினமும், 300-க்கும் அதிகமானோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போதுமான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. அதை எதிர்கொள்ள, திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது' என்று கூறப்படுகிறது.

Covid ward

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது வரை ஏழு கர்ப்பிணிகள் உட்பட ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் சிகிச்சை அளித்து வருவதாகவும் அம்மருத்துவமனை முதல்வர் நேரு தெரிவித்துள்ளார்.