கொரோனா வைரஸ்

கொரோனாவால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு : மொத்தம் 64 பேர் மரணம்

webteam

கொரோனா வைரஸால் ஒரு வருடம் 7 மாதங்கள் நிரம்பிய குழந்தை உள்பட மேலும் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகின்றது. அத்துடன் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளது. ஆனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து 60க்கும் மேல் பதிவாகி வருகிறது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி மேலும் 64 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 27 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதனால் சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1196 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் 1,829 ஆக கொரோனா உயிரிழப்புகள் உயர்ந்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட 64 உயிரிழப்புகளில் இணை நோய் பாதிப்புகளுடன் இறந்தவர்கள் 57 பேர். மேலும் பிற நோய் பாதிப்பு எதுவுமின்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு வருடம் 7 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று தனியார் மருத்துவமனையில் கடந்த 8ஆம் தேதியன்று சேர்க்கப்பட்டது. மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்த அந்தக் குழந்தை நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தது.