தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் இருப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வுகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தொற்று அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது.
நகர் புறங்களில் 82.5 சதவீதம் பேரும், கிராம புறங்களில் 79.7 சதவீத பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக உள்ளனர். வயது வாரியாக எடுக்கப்பட்ட ஆய்வில், 18 முதல் 44 வயதுடையர்கள் 16.9 சதவீதம் பேரும், 45 முதல் 60 வயதுடையவர்கள் 18.2 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27.6 சதவீதம் பேர் தடுப்பூசி குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். மக்களின் தயக்கத்தை போக்கி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக பொது சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது.