கொரோனா வைரஸ்

திருப்பூர்: கொரோனா சிகிச்சை மையத்தில் தரமான உணவு வழங்கக்கோரி உண்ணாவிரதம்

kaleelrahman

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாவட்ட சித்த மருத்துவம் சார்பில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

100 பேர் தங்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா சிறப்பு மருத்துவ முகாமில் தற்போது 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழ்நிலையில் இம்மையத்தில் மாவட்ட நிர்வாகம் சரிவர உணவு விநியோகிப்பது இல்லை எனவும், இது குறித்து புகார் அளித்தாலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. 

 இதனால் இன்று மதியம் நோயாளிகள் அனைவரும் தரமான உணவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உணவு உண்ண மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.