சினிமா

அனுராக் மீது #MeToo புகார்: முன்னாள் மனைவி எதிர்ப்பு!

JustinDurai
அனுராக் காஷ்யப் மீதான #MeToo புகாருக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி குரல் கொடுத்துள்ளார்.
 
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 19-ம் தேதி குற்றம்சாட்டியிருந்தார்.
 
 
இந்த புகாருக்கு அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவியான கல்கி கொச்சிலின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது அனுராக் மீதான மீடூ புகாருக்கு எதிராக வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
"அன்பார்ந்த அனுராக். இந்த சமூக ஊடகக் கூத்து உங்களைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திரைக்கதைகளில், பெண்களின் விடுதலைக்காகப் போராடியிருக்கிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் அவர்களின் நேர்மைக்காகக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். இவற்றுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன்.
 
தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் என்னை உங்களுக்குச் சரிசமமாகத்தான் பார்த்திருக்கிறீர்கள். நமது விவாகரத்துக்குப் பிறகும் எனது கண்ணியத்துக்காகத் துணை நின்றீர்கள். நாம் ஒன்று சேரும் முன்னரே ஒரு பணிச் சூழலில் நான் பாதுகாப்பின்றி உணர்ந்தபோது என்னை நீங்கள் ஆதரித்தீர்கள்.
 
யாரும், யாரையும் அவதூறு பேசும், வினோத காலகட்டம் இது. விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆபத்தான, அருவருப்பான செயலாகும்.
 
வலிமையாக இருங்கள். நீங்கள் செய்து வரும் வேலையைத் தொடருங்கள்’’ என்று கல்கி கொச்சிலின் தெரிவித்துள்ளார்.