சினிமா

'டைம் டிராவல்' கதையில் சிவனாக நடிக்கும் யோகிபாபு - காத்திருக்கும் மாஸ் சம்பவம்

சங்கீதா

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் சிவனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘தள்ளிப் போகாதே’ போன்ற பல படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். இவர் இப்பொழுது , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்  'தி கிரேட் இந்தியன் கிச்சன்', மிர்ச்சி சிவா நடிக்கும் 'காசேதான் கடவுளடா' ஆகிய படங்களை இயங்கி முடித்து, படத்தை வெளியிடும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஆர். கண்ணன் இயக்கும் 12-வது படத்திற்கு ‘பெரியாண்டவர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இதில் சிவன் வேடம் அணிந்து கதை நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. இது ஒரு டைம் டிராவல் படம். வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகும் இந்தப்படம், யோகிபாபு நடித்த ‘கோலமாவு கோகிலா’, ‘கூர்கா’, ‘தர்மபிரபு’, ‘மண்டேலா’ ஆகிய படங்களின் வரிசையில் இந்தப்படம் அமைந்திருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணியையும் படக்குழு மேற்கொண்டுள்ளது. இதன் படபிடிப்பு கோடை முடிந்ததும் ஆரம்பமாக உள்ளது.

யோகிபாபு, சிவன் வேடம் ஏற்று நடிப்பதால், சிவன் கோவில் செட் ஒன்று ஈசிஆரில், ரூபாய் 50 லட்சம் செலவில் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால், கபிலன் வைரமுத்து இந்தப்படத்தில் பாடல்கள் எழுதி  வசனகர்த்தாவாக ஆர். கண்ணனுடன் இணைகிறார். சிவன் கதையோடு டைம் டிராவ்லர் கதை என்பதால், கிராபிக்ஸ் காட்சிக்காக மும்பையில் உள்ள பெரிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மசாலா பிக்ஸ் நிறுவனம் 9-வது படமாக இந்தப்படத்தை தயாரிக்கிறது.