சினிமா

ராக்கிங் ஸ்டார் யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப். 3’ எப்போது? - அடுத்தப் படம் இதுதானா?

சங்கீதா

நடிகர் யஷ்ஷின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘கே.ஜி.எஃப் 3’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், யஷ்ஷின் புதியப் படம் குறித்த தகவல்களும் கசிந்து வருகிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் வெளியான ‘கே.ஜி.எஃப்.’ முதல் பாகம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சொல்லப்போனால், கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியானப் படங்களில் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, அதிக வசூலை ஈட்டியப் படங்களில் ‘கே.ஜி.எஃப். 2’ முதலிடத்தைப் பிடித்திருந்தது. இதையடுத்து, ‘கே.ஜி.எஃப். 3’ படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில், ‘கே.ஜி.எஃப். 3’ படம் வரும் 2025-ம் ஆண்டுதான் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2026-ல் படத்தின் வெளியீடு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸின் ‘சலார்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் ‘கே.ஜி.எஃப். 3’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்றுக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், யஷ் நடிக்கும் ‘யஷ்19’ படத்தை ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் கர்நாடக மாநில விநியோக உரிமம் பெற்ற கேவின் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியப் படமாக மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் யஷ்ஷின் 37வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘கே.ஜி.எஃப்.’ படத்தைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.