சினிமா

“சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்” - பிரியங்கா சோப்ரா 

webteam

ஆரம்ப காலங்களில் சினிமாவில் இருந்து தான் தூக்கி எறியப்பட்டதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. அதற்குப் பிறகு திரையுலகில் கால்பதித்த அவர், இந்தியில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். அதன்பின்னர் ஹாலிவுட் படங்களிலும் மற்றும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் விஜய் இவர் ஜோடியாகவும் நடித்துள்ளார். 

இந்நிலையில் 'ஓக் இந்தியா'வுக்கு பேட்டியளித்த பிரியங்கா சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலம் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் சினிமா உலகில் தான் அலைக்கழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதில், ''எனக்கு யாரையும் தெரியாது. எதுவும் தெரியாது. இயக்குநர் என் மீது கோபப்பட்டு திட்டிக்கொண்டே இருப்பார்கள். நான் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டேன். சினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். அந்தக் கடினமான நாட்களில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என் தந்தையின் ஊக்கமான வார்த்தைகள்தான். 

தோல்விக்கு பிறகு நாம் அதனை எப்படி கையாள்கிறோம் என்பதே வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் வழி. அதிகம் பேசினால் நாம் குறைவாகவே கவனிப்போம். குறைவாகவே கற்றுக்கொள்வோம் என அடிக்கடி நினைத்துக்கொண்டு என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன்'' எனத் தெரிவித்துள்ளார்.