அன்புசெழியனுக்கு ஆதரவாக எந்த எம்.எல்.ஏ.க்கள் எம்.பிக்கள் வந்தாலும் விட மாட்டோம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் சசிக்குமாரின் உறவினரும், அவரது தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணிபுரிந்தவருமான அசோக்குமார்,
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அசோக்குமார் எழுதி வைத்த கடிதத்தின் மூலம்
அன்புச்செழியனிடம் கடன் பெற்றதும், அன்புச்செழியன் அவரை மிரட்டியதும் தெரியவந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய
காவல்துறையினர், அன்புச்செழியன் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அன்புச்செழியன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ரெட்கார்டை பயன்படுத்தி நிறைய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தொந்தரவு
செய்யப்பட்டுள்ளார்கள். நிறைய கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. கொடுமைக்கு ஆளான தயாரிப்பாளர்கள் பட்டியலில்
எல்லோரும் உள்ளனர். ஆனால் சொல்லமாட்டார்கள். தற்போது சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளார்கள்.
கந்துவட்டி கொடுமையால் நானும், கவுதம்மேனன், பார்த்திபன் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளோம். கடனை அடைத்தாலும்
ஆவணங்களை அன்புச்செழியன் கொடுப்பதில்லை. கந்துவட்டி கேட்டு தயாரிப்பாளரை மிரட்டினால் இனி நடப்பதே வேறு. 90
சதவீதம் தயாரிப்பாளர்கள் கடனில் உள்ளனர். அனைவரும் ஒன்றுகூடி பிரச்சனைக்கு முடிவு கட்டுவோம்.
எல்லா அமைப்புகளிலும் ஒரு மரணம் நிகழ்ந்தால் புரட்சி வெடிக்கும். அந்த புரட்சி தற்போது வெடித்துள்ளது. அன்புச்
செழியனுக்கு ஆதரவாக நிறைய சிபாரிசுகள் வரும் அதனையெல்லாம் தாண்டி அசோக்குமார் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க
வழி செய்யுங்கள். கந்துவட்டி கொடுமையால் நிகழும் கடைசி மரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.