சினிமா

விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் பொங்கலுக்கு வெளியீடு?

கலிலுல்லா

விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீடு ஜனவரி 7ஆம் தேதியிலிருந்து ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது பொங்கல் வெளியீட்டில் இருந்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விலகியுள்ள நிலையில் வலிமை திரைப்படம் மட்டுமே வெளியாகும் என்ற நிலை ஏற்பட்டது. இருந்த போதிலும் அந்த திரைப்படமும் உறுதியாக அதே தேதியில் வெளியாகுமா என்ற கேள்விகளும் திரைத்துரையில் வலம் வருகின்றன.

இந்த நிலையில் ஜனவரி 26-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியிடலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை நடிகர் விஷால் தயாரித்து நடித்திருக்கிறார். இதன் காரணமாக வீரமே வாகை சூடும் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியமைக்க அவர் ஆலோசித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை பொங்கல் வெளியீட்டில் இருந்து அனைத்து படங்களும் விலகினால் 'வீரமே வாகை சூடும்' பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அதுகுறித்த இறுதி முடிவு இன்று மாலைக்கு எடுக்க வாய்ப்புள்ளது எனவும் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.