சினிமா

`தளபதி முதல்வர்... நான் அமைச்சர், இவரு எம்.எல்.ஏ!’- பதவி பிரித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்!

webteam

திரைப்படத் துறையில் 30 ஆண்டுகளை கடந்த நடிகர் விஜய் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் எனவும், திரைத்துறையில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நடிகர் விஜயின் ரசிகர்கள் யாகம் வளர்த்து அன்னதானம் வழங்கி பூஜை செய்துள்ளனர்.

30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாளைய தமிழ்நாட்டின் முதல்வரே என போஸ்டர் அடித்துக் கொண்டாட்டம். தமிழக திரைத்துறையில் நடிகர் விஜய், 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகியதை வரவேற்று கொண்டாடும் விதமாக, விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பெரியகுளம் அருகே செங்குளத்துப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள சத்யாகிரக சேவா ஆசிரம கோவிலில், விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிறப்பு யாகம் வளர்த்து நடிகர் விஜய் கலைத்துறையில் மேலும் சிறந்து விளங்க வேண்டும் என வழிபாடு செய்தனர். மேலும் யாக நிகழ்ச்சிக்குப் பின்பு அப்பகுதி கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கி, நடிகர் விஜய் 30ஆம் ஆண்டு கலைத்துறை பயணத்தை கொண்டாடி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தேனி மாவட்ட விஜய் ரசிகர்களும் விஜயை அரசியலுக்கு இழுத்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு தேனி மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக நாளைய முதல்வர் விஜய், நாளைய அமைச்சர் புஸ்லி ஆனந்த், நாளைய சட்டமன்ற உறுப்பினர் பாண்டி என தேனி, பெரியகுளம் நகர் முழுவதும் சுவரொட்டி உள்ளனர்.

மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வாருங்கள் என்றும் தமிழகத்தின் வருங்கால முதல்வரே என்றும், இன்று தளபதி நாளை தமிழகத்தின் தளபதி என விஜய் அரசியலுக்கு இழுக்கும் விதமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது அனைவரைது பார்வையையும் வெகுவாக கவர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.