விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி புதிய தலைமுறை
சினிமா

“ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தப்பில்லை; ஆனால்...” - விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு

ஜெ.நிவேதா

செய்தியாளர் - சனா

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் ‘ரோமியோ’. வரும் 11 ந்தேதி ரிலீஸாக உள்ள இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று கோவையில் நடைபெற்றது. இதில் ரோமியோ படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் நாயகி மிருணாளினி ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

விஜய் ஆண்டனி

அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “சூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்திற்கு பிறகு மனதளவில் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. அண்மையில் வெளியான சில படங்கள் இதற்கு எடுத்துகாட்டாக இருக்கிறது” என்றார்.

‘ரோமியோ திரைப்படம் குறித்து கூறுங்கள்...’

“குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். குறிப்பாக மனைவிகள் பார்க்க வேண்டிய படம். ஒவ்வொரு கணவனும் மனைவியை இந்த படத்திற்கு அழைத்து வர வேண்டும். ரோமியோ திரைப்படம் காதல் மற்றும் திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசியிருக்கிறது”

‘படத்தில் நாயகி மது அருந்துவது போன்ற போஸ்டர் வெளிவந்ததே... அது கலாசார சீரழிவு இல்லையா?’

“படத்தில் சிறிய காட்சியில்தான் அதை வெளிப்படுத்தி உள்ளோம். கலாசார சீரழிவு போன்ற விஷயங்கள் படத்தில் எங்கும் புகுத்தப்படவில்லை. பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள். ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவதில் தாய், மனைவி போன்றவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்”

‘நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு உங்கள் ஆதரவு உண்டா?’

“நான் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்கிறேன்”

தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்குகின்றனரே.. அதுபற்றிய உங்கள் கருத்து?

“ஓட்டுக்கு பணம் வழங்குவதும், அதை பெறுவதும் தவறுதான். அதேநேரம் குடும்ப வறுமை, சூழ்நிலை கருதி ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்தை வாங்கி கொள்ளலாம். அதற்காக ‘பணம் பெற்றுவிட்டோம் அந்த கட்சிக்குதான் ஓட்டுப்போட வேண்டும்’ என நினைக்கக்கூடாது. நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்”