vijay hug ajith ajikumarracing
சினிமா

கோட்டை தேவையில்லை.. கூட்டணி வைத்திருப்போம்! அஜித்தை ஆரத்தழுவிய விஜய்! நெகிழ்ந்து போன ரசிகர்கள்!

தமிழ்சினிமாவில் இருதுருவங்களாக இருந்துவந்த அஜித்-விஜய் ரசிகர்கள் இன்று பத்ம பூஷண் அஜித்குமார் மற்றும் முதலமைச்சர் விஜய் இருவரும் ஆரத்தழுவிய காட்சியை பார்த்து நெகிழ்ந்துபோயுள்ளனர்.

Rishan Vengai

பத்ம பூஷண் அஜித்குமார், முதலமைச்சர் விஜய் இருவரும் பிரிட்டன் சில்வர்ஸ்டோனில் மிஷெலின் லீ மான்ஸ் கார் பந்தயத்தில் வரலாற்று தருணம் படைத்தனர். அஜித்தை பார்த்த விஜய் ஓடிவந்து ஆரத்தழுவிய காட்சி, இருவரும் அன்பு முத்தம் பரிமாறிக்கொண்ட தருணம், ரசிகர்கள் மோதலை கரைத்துவிட்டு நட்பு, ஒற்றுமை, மரியாதை நிறைந்த புதிய அத்தியாயமாக மாறியது.

கோட்டை தேவையில்லை.. ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்.. சென்ட்ரல் கவிழ்ந்தாலும்.. அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்’ என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் நடிகர் அஜித்குமார் மற்றும் முதலமைச்சர் விஜயின் சந்திப்பு நடந்துள்ளது. 1995ஆம் ஆண்டு வெளிவந்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் ஒன்றாக திரையை பகிர்ந்துகொண்ட 2 இளைஞர்கள், பின்னர் திரை நட்சத்திரங்களாக ஒன்றாக வளர்ந்து, இன்று தங்களுடைய இருவேறு வாழ்க்கை பயணத்தில் புகழ்உச்சியை தொட்டுள்ளனர். இதற்கிடையில் திரைப்படங்கள் வெளியாகும்போது இரண்டு பேரின் ரசிகர்களுக்கு இடையே மோதல்கள் இருந்துவந்தாலும், இவ்விரு ஆளுமைகளுக்கு இடையே எப்போதும் நட்பு மட்டுமே இருந்துள்ளது. அதை பலமுறை இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

2 பேரின் திரைப்பயணத்தை கடந்து தவெக தலைவராக விஜயின் அரசியல் பயணத்தின் போதும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தனிநபர் காரணமல்ல என்று கூறிய அஜித்குமார், தற்போது முதலமைச்சராகவும் விஜயின் செயல்பாடுகளை பாராட்டி பேசியுள்ளார். இந்த சம்பவங்களுக்கு பிறகு இரண்டு பேரின் ரசிகர்களுக்கு இடையேயான மோதல்மனப்பான்மை குறைந்திருக்கும் நிலையில், இன்று அஜித்குமாரின் கார் பந்தயத்தை தொடங்கிவைக்க முதலமைச்சர் விஜய் பிரிட்டன் சென்ற நிகழ்வு இரண்டு பேரின் ரசிகர்களையும் நெகிழச்செய்துள்ளது.

ajith - vijay

பிரிட்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிஷெலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்றார். அஜித் பங்கேற்கும் இந்த பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க பிரிட்டன் புறப்பட்டு சென்றார். அங்கு போட்டி நடக்கும் இடத்திற்கு வந்த விஜயை வரவேற்க அஜித்குமார் காத்திருந்தார். அப்போது அஜித்தை பார்த்த முதலமைச்சர் விஜய் ஓடிப்போய் அஜித்தை ஆரத்தழுவிக் கட்டிக்கொண்டார். இரண்டுபேரும் அன்பின்பாற் முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் போட்டியில் பங்கேற்கும் சகவீரர்களை ஒவ்வொருவராக முதலமைச்சர் விஜய்க்கு அஜித் அறிமுகம் செய்துவைத்தார். இதைப்பார்ப்பதற்கே அவ்வளவு அற்புதமாக இருந்தது. இந்த வரலாற்று சம்பவம் தமிழ்நாட்டு மக்களுக்கும், இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் காலத்திற்கும் மறக்கமுடியாத ஒரு நெகிழ்ச்சியான தருணமாக மாறியது.