சினிமா

‘இந்தப் படம்தான் எனக்கு எல்லாத்தையும் கொடுத்தது.. தனுஷ் சாருக்கு நன்றி’ - விக்னேஷ் சிவன்

சங்கீதா

‘நானும் ரௌடி தான்’ படம் வெளியாகி 7 ஆண்டுகள் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுகுறித்து தனது சமூவலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சிம்புவின் நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்தப் படம் தோல்வியை சந்தித்த நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ‘நானும் ரௌடி தான்’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, பார்த்திபன், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். காதல் - ஆக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தை தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை வெளியிட்டு இருந்தது. பல்வேறு பணப் பிரச்சனைகளுக்குப் பிறகு இந்தப் படத்தை உருவாக்க தனுஷ் காரணமாக இருந்த நிலையில், இதன் படப்பிடிப்பின்போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலிக்க துவங்கி, 7 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

மேலும், விக்னேஷ் சிவன் சினிமா கேரியரில் அடுத்தடுத்து முன்னேற இந்தப் படம் காரணமாக அமைந்தது. இந்நிலையில், ‘நானும் ரௌடி தான்’ படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ‘7 வருட மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படம், இதற்கான உழைப்புதான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. தனுஷ் சாருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.