சினிமா

நயன்தாரா குறித்த ராதாரவியின் கருத்து அருவருப்பானவை - விக்னேஷ்சிவன்

webteam

'கொலையுதிர் காலம்' திரைப்பட  ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நடிகர் ராதாரவிக்கு இயக்குநர் விக்னேஷ்சிவன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். ''நயன்தாரா நல்ல நடிகை. இவ்ளோ நாள் சினிமாவில் நீடிப்பதே பெரிய விஷயம். அவங்களை பற்றி வராத செய்தியெல்லாம் இல்லை என்றும் தெரிவித்தார். இன்னும் சில கருத்துகளையும் தெரிவித்தார். ராதாரவியின் அந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் விக்னேஷ்சிவன், ’’ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருவருப்பானவை. தன் மீதான கவனத்தை ஈர்க்கவே ராதாரவி இப்படி செய்கிறார். மூளையற்றவர். அந்த குப்பைக் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்து கைதட்டியது இன்னும் கவலையான விஷயம். 

இதுதான் ஒரு படத்தை விளம்பரம் செய்யும் விதம் என்றால் இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவதே நல்லது. என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இது ஒரு பரிதாபமான நிலை’’ என்று கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்