சினிமா

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அப்டேட் - படக்குழு பகிர்ந்த புகைப்படம்!

சங்கீதா

வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிட உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக சத்தியமங்கலம், சிறுமலை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘நீ தானே என் பொன்வசந்தம்’ உட்பட பல படங்களை தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகம் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் இருப்பதால், விரைவில் படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.