சினிமா

மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகிறது ’வாழை’ – ஷூட்டிங்கை தொடங்கிவைத்த உதயநிதி!

webteam

இயக்குநர் மாரி செல்வராஜின் புதிய படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் புதிதாக வாழை என்ற திரைப்படத்தை மாரி செல்வராஜ் தயாரித்து இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தில் நடைபெற்றது.

இதில், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த வாழை படத்தை மாரி செல்வராஜே தயாரிக்க இருக்கிறார்.