பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக, உத்தரபிரதேச போலீசார் மும்பையில் உள்ள நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் வீட்டுக்கு நேற்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள். தமிழில், ’லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, டெல்லியில் நடந்த’இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பணம் வாங்கியிருந்தார். அவருக்கு நான்கு தவணைகளில் ரூ.37 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சிக்கு வர அவர் மறுத்துவிட்டார். இதனால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீஸ் ஸ்டேஷனில், புகார் கொடுத்தனர். போலீசார், சோனாக்ஷி சின்ஹா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து சோனாக்ஷி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் கைதுக்கு இடைக்கால தடை விதித்தது. போலீசார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் வரை சோனாக்ஷி கைது செய்யப்பட மாட்டார் என்றும் விசாரணைக்கு சோனாக்ஷி ஒத்துழைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் உத்தரபிரதேச போலீசார், இந்த வழக்கு விசாரணைக்காக, மும்பையில் உள்ள சோனாக்ஷியின் வீட்டுக்கு நேற்று சென்றனர். அவர் வீட்டில் இல்லை. சில மணி நேரம் காத்திருந்த போலீசார் திரும்பிச் சென்றனர். இன்றும் அவர் வீட்டுக்கு செல்லும் போலீசார் சோனாக் ஷியிடம் விசாரணை நடத்த உள்ளனர்.