சினிமா

“வந்துட்டேன்னு சொல்லு” - நடிகர் வடிவேலுவின் பெயரில் போலி கணக்கு

webteam

நடிகர் வடிவேலுவின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கு போலியானது என்று தெரியவந்துள்ளது.


நடிகர் வடிவேலுவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. இதனை அட்லி இயக்கியிருந்தார். இவரது நடிப்பில் தொடங்கப்பட்ட ‘இம்சை அரசன் 24 ஆம் புலிக்கேசி’ திரைப்படம் சில பிரச்னைகளால் தயாரிப்பாளர் சங்கம் வரை பஞ்சாயத்திற்கு சென்றது. இயக்குநர் ஷங்கர் தந்த புகாரின் பேரில் வடிவேலு மீது சங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆகவே அந்தப் படம் பாதியிலேயே முடங்கிப் போனது.

இந்நிலையில் வடிவேலுவின் பெயரில் நேற்று திடீரென்று புதியதாக ஒரு ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருந்தது. அதில் அவரது பழைய வீடியோவை பயன்படுத்தி, ‘வந்துட்டேன்னு சொல்லு.. ரஜினி பாணியில் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என தகவல் போட்டு பரப்பப்பட்டது. இதனை உண்மை என நம்பி பலரும் அதிகமாக ஷேர் செய்ய தொடங்கியிருந்தனர். பின்தொடர ஆரம்பித்திருந்தனர். மற்றொரு பக்கம் இந்தக் கணக்கு உண்மை? அல்லது போலி கணக்கா என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

நடிகர் வடிவேலு சமூக ஊடகங்கள் எதிலும் இல்லை. கடந்த சில மாதங்கள் முன்பு கூட இவரது ‘நேசமணி’ கேரக்டர் சமூக ஊடகத்தில் பெரிய அளவு வைரலானது. அப்போது கூட வடிவேலு தான் ட்விட்டர் உள்ளிட்ட எந்தச் சமூக ஊடகங்களிலும் இல்லை என்றே விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே புதியதாக வலம் வந்த ட்விட்டர் கணக்கு வடிவேலுவின் உண்மையானது அல்ல என்று உறுதியாகியுள்ளது. வடிவேலுவின் தரப்பு இது போலியானதுதான் என கூறி மறுத்துள்ளது.