பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப், திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்புக்குப் பிறகு சினிமா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இருந்து சற்று விலகியே இருந்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் கணவர் விக்கி கௌஷலுடன் அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கத்ரீனா கலந்துகொண்டார். அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அவரது தோற்றம் குறித்து சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்தனர்.
கத்ரீனா பாரம்பரிய உடையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது தோற்றத்தை பலரும் பாராட்டிய நிலையில், சில சமூக வலைதள பயனர்கள் அவரது உடல் எடை அதிகரித்திருப்பதாகக் கூறி ட்ரோல் செய்தனர். திருமணத்திற்கு முன்பு இருந்த தோற்றத்துடன் தற்போதைய தோற்றத்தை ஒப்பிட்டும் சில கருத்துகள் பதிவிடப்பட்டன. குறிப்பாக, "கத்ரீனா எப்படி இருந்தார், இப்போது எப்படி ஆகிவிட்டார்" என்பது போன்ற உடலை மையப்படுத்திய விமர்சனங்களும், மோசமான கமெண்ட்களும் சமூக வலைதளங்களில் பதிவாகின. அதே நேரத்தில், இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக கத்ரீனாவின் ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்தனர்.
கத்ரீனாவின் தோற்றத்தை வைத்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், நடிகை ஷிவாலிகா ஓபராய் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தாய்மைக்குப் பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்களை இயல்பான ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்றும், புதிய தாய்மார்களிடம் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை எதிர்பார்ப்பது தேவையற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கத்ரீனா கைஃபின் நடிப்பை மட்டுமல்லாமல், அவரது தோற்றத்தையும் பல ஆண்டுகளாக ரசிகர்கள் கவனித்து வரும் நிலையில், குழந்தை பிறந்த பிறகு ஏற்பட்டுள்ள இயல்பான உடல் மாற்றங்களும் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. ஒரு பக்கம் ட்ரோல்கள் தொடர்ந்தாலும், மறுபக்கம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக நிற்பது இந்த விவகாரத்தை மேலும் கவனம் பெறச் செய்துள்ளது.