ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மூதாட்டி ஒருவரை மையமாகக் கொண்டு நகைச்சுவையாக கதை சொல்லப்பட்டுள்ளது. குடும்ப உறவுகள் சொத்தைப் பற்றி கேட்க, ராதிகா உடல்நிலை சரியில்லாமல் மாறுவது போன்ற காட்சிகள் உள்ளன. டிரெய்லர் ரசிகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.
ராதிகா நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ள படம் `தாய் கிழவி'. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
படம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. மூதாட்டி ஒருவரை சுற்றி நடக்கும் கதை நகைச்சுவையாக சொல்லப்பட்டிருப்பது போல டிரெய்லர் விவரிக்கிறது.
பவுனுத்தாயி மூதாட்டியாக நடித்திருக்கும் ராதிகா சாப்பிட்டு கொண்டிருக்கும் போது சொத்தை பிரித்து தரும்படி குடும்ப உறவுகள் கேட்பது போல தொடங்கும் டிரெய்லர், ராதிகா உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக மாறிவிடுவது போலவும், பின்னர் ராதிகா இறந்துவிடுவது போலவும், அதேநேரத்தில் உயிரோடு இருப்பது போலவும் யூகிக்க முடியாமல் டிரெய்லர் கட்செய்யப்பட்டுள்ளது. கிழவின் சொத்தை தேடி அலையும் உறவுகள், சேட்டை செய்யும் பவுனுத்தாயி கிழவி என படம் லூட்டியாக இருக்கிறது.
டிரெய்லரின் முடிவில் பவுனுத்தாயிக்கு கலைஞர் காப்பீடு, அம்மா காப்பீடு இருக்கிறதா என மருத்துவமனையில் கேட்க, அருவா சுத்தி நட்சத்திரம், கலைஞர் கட்சி, ரெட்ட இலை, நாம் தமிழர், தவெக 18வது வார்டு செயலாளர் என வசனம் இடம்பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.