சினிமா

இயக்குநர் பள்ளித் தோழன், ஹீரோ டொவினோ... தந்தை தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்!

PT WEB

தன் தந்தையின் தயாரிப்பில், தனது பள்ளித் தோழனின் இயக்கத்தில் டொவினோ ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் மகேஷ் பாபுவின் `சர்காரு வாரி பாட்டா' மற்றும் `குட்லக் சகி' போன்ற படங்களிலும், தமிழில் செல்வராகவனுடன் ``சாணி காயிதம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து இவரது நடிப்பில் `மரைக்கார்' படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகி இருக்கிறார்.

`வாஷி' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில்தான் நடிக்க இருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் உடன் மலையாளத்தின் முன்னணி நாயகனாக வளர்ந்துள்ள டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற படங்களை விட `வாஷி' கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமான படமாக அமைந்துள்ளது. காரணம், இந்தப் படத்தை தயாரிப்பது கீர்த்தி சுரேஷின் தந்தைதான். மேலும், படத்தை எழுதி இயக்கப்போவது கீர்த்தி சுரேஷின் பள்ளிக் கால நண்பர் விஷ்ணு ஜி ராகவ் என்பவர்தான்.

படத்தின் ஷுட்டிங் தொடங்கியுள்ள புகைப்படங்களை பகிர்ந்து, ``நீங்கள் நினைப்பதை விட என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு படம் இது. ஒரு மகளாக தனது தந்தையின் தயாரிப்பில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. தந்தைதானே, வாய்ப்பு எளிதாக அமைந்துவிடும் என உங்களில் பலர் நினைக்கலாம். ஆனால் அப்படி சாதாரணமாக இந்த வாய்ப்பு அமையவில்லை. ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு பிறகு எனது கனவு இப்போதுதான் நனவாகி உள்ளது. `வாஷி' படத்தை அறிமுகம் செய்கிறோம்" என்று நெகிழ்வாக குறிப்பிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.