சினிமா

'பாலியல் சீண்டல் என தெரிவதற்கே 8 ஆண்டுகள் ஆனது' நடிகை ஸ்வரா பாஸ்கர்

webteam

தானும் இயக்குநர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ராஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்வரா பாஸ்கர். பாலிவுட்டில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்வரா தானும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நானும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளேன். ஆனால் அது பாலியல் சீண்டல் என எனக்கு தெரியவே 8 ஆண்டுகள் ஆனது. பாலியல் சீண்டலை தெரிந்து கொள்ள நம் கலாசாரம் கற்றுக்கொடுக்கவில்லை. நானும் வேலை நிமித்தமான இடங்களில் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். அந்த நபரை நான் தொட அனுமதிக்கவில்லை நான் சுதாரித்துக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாலியல் சீண்டல்கள் குறித்தான விழிப்புணர்வு குறித்து நமது பெண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் அமைதி காக்கும் நமது கலாசாரம் பாலியல் சீண்டலை கண்டுகொள்ளாமல் செல்ல வழிவகுத்து விடுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன. அதன் சிறு சிறு அசைவுகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 

பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் குரலை உயர்த்தவே அச்சம் கொள்ளுகின்றனர். இந்த சமூகம் அவர்களை ஒரு குற்றவாளியாகவே கருதும் என அஞ்சுகின்றனர். நம் கலாசாரத்திலும் மாற்றம் தேவை. பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக குரல் கொடுக்கும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு இயக்குநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினால், யாருடைய பெயரையும் ஸ்வரா பாஸ்கர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மீ டூ விவகாரம் பாலிவுட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி அடங்கிய இந்நேரத்தில் ஸ்வரா பாஸ்கரின் இந்த தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.